8.5 C
Munich
Tuesday, September 17, 2024
Home Blog

வங்கதேச வன்முறை; 105 பேர் பலி: 778 மாணவர்கள் இந்தியா வந்தனர்.

வங்கதேசத்தில் நடந்து வரும் போராட்டத்தால், இதுவரை 105 பேர் உயிரிழந்தனர். அங்கு பதற்றமான சூழல் நிலவுவதால், 778 இந்திய மாணவர்கள் தாயகம் நோக்கி திரும்பினர்.கடந்த 1971ல் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற பின், வங்கதேசம் தனி நாடாக பிரிந்தது. இந்த போரில் உயிர் தியாகம் செய்தோர் குடும்பத்தைச் சேர்ந்த வாரிசுகளுக்கு அந்நாட்டு அரசு வேலையில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 2018ல் நடந்த மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து இந்த இடஒதுக்கீடு நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், இடஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்த போவதாக அந்நாட்டு அரசு சமீபத்தில் அறிவித்தது. இதை எதிர்த்து வங்கதேச மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்து வரும் மோதலில், இதுவரை 105 பேர் உயிரிழந்தனர்.

பள்ளி, கல்லூரிகள் மூடல்

அனைத்து பள்ளி, கல்லுாரிகள் மற்றும் பல்கலைக்கழங்கள் மூடப்பட்டன. மாணவர்கள், விடுதிகளை விட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டது. அந்நாட்டில் பதற்றமான சூழல் நிலவுவதை அடுத்து, அங்கு படிக்கும் இந்திய மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் டாக்காவில் உள்ள இந்திய துாதரகம் செய்து வருகிறது.

தற்போது, கிடைக்கக்கூடிய வழிகளை பயன்படுத்தி, இந்திய மாணவர்கள் வீடு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்திய மாணவர்கள் சுமார் 4 ஆயிரம் பேரை தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இணைய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் பெற்றோரை தொடர்பு கொண்டு பேசுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

குரங்கம்மை நோய்க்கான முதல் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல்..!

உலக சுகாதார நிறுவனம் ஆப்பிரிக்காவில் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள குரங்கம்மை நோய்க்கான முதல் தடுப்பூசியை MVA-BN என்ற பெயரில் ஒப்புதல் வழங்கியுள்ளது.இந்த குறிப்பிடத்தக்க வளர்ச்சியானது, அவசரமாக தேவைப்படும் சமூகங்களில் இந்த முக்கியமான தடுப்பூசிக்கான சரியான நேரத்தில் அணுகலை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தடுப்பூசி உற்பத்தியாளரான பவாரியன் நோர்டிக் ஏ/எஸ் வழங்கிய தகவல்களின் முழுமையான மதிப்பாய்வு மற்றும் ஐரோப்பிய மருந்துகள் ஏஜென்சியின் மதிப்பீட்டிற்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.MVA-BN தடுப்பூசி 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.நான்கு வார இடைவெளியில் இரண்டு ஊசிகளாக கொடுக்கப்படுகிறது. ஆரம்ப குளிர் சேமிப்பிற்குப் பிறகு, தடுப்பூசி 2-8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் எட்டு வாரங்கள் வரை பயனுள்ளதாக இருக்கும்.

WHO இன் மூலோபாய ஆலோசனைக் குழு MVA-BN பயன்பாட்டிற்கு பரிந்துரை

MVA-BN தடுப்பூசியின் ஒரு டோஸ் குரங்கம்மை தொற்றுவதற்கு முன் கொடுக்கப்பட்டால், அது mpox தொற்றுக்கு எதிராக 76% வரை பாதுகாப்பைக் கொடுக்கிறது என மதிப்பிடப்பட்டுள்ளது.அதே சமயம் இரண்டு-டோஸ் அட்டவணை 82% மதிப்பீட்டின் செயல்திறனை அடைகிறது என்று தரவு குறிப்பிடுகிறது.நோய்த்தடுப்பு தொடர்பான உலக சுகாதார நிறுவனத்தின் மூலோபாய ஆலோசனைக் குழு நிபுணர்கள் (SAGE) அதிக ஆபத்தில் உள்ள நபர்களுக்கு mpox பாதிப்பின்போது தடுப்பூசியைப் பயன்படுத்த பரிந்துரைத்தது.

18 வயதிற்குட்பட்டவர்களுக்கு தற்போது உரிமம் இல்லை என்றாலும், தடுப்பூசியின் நன்மைகள் சாத்தியமான அபாயங்களை விட அதிகமாக இருக்கும் பகுதிகளில் குழந்தைகள், இளம் பருவத்தினர், கர்ப்பிணி மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்களுக்கு பயன்படுத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

டெலிகிராம் செயலியின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ் கைது..!

பிரபலமான செய்தி பரிமாற்ற செயலியாக டெலிகிராம் இருந்து வருகிறது. குறிப்பாக ரஷியா, உக்ரைன் மற்றும் முன்னாள் சோவியத் யூனியனின் குடியரசுகளில் டெலிகிராம் செல்வாக்கு பெற்றதாக இருக்கிறது. பேஸ்புக், யூடியூப், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், டிக்டாக் மற்றும் வீசேட் ஆகியவற்றிற்குப் பிறகு முக்கிய சமூக ஊடக தளங்களில் ஒன்றாக டெலிகிராம் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இது அடுத்த ஆண்டில் ஒரு பில்லியன் பயனர்களை உருவாக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது.

துபாயை தளமாகக் கொண்ட டெலிகிராம் ரஷியாவில் பிறந்த துரோவ் என்பவரால் நிறுவப்பட்டது. 2014-ம் ஆண்டு அவர் விற்ற தனது வீகே சமூக ஊடக தளத்தில், எதிர்க்கட்சி சமூகங்களை மூடுவதற்கான அரசாங்க கோரிக்கைகளுக்கு இணங்க மறுத்த பின்னர் அவர் ரஷியாவை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில் டெலிகிராம் செயலியின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ், பிரான்ஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரான்சில் உள்ள போர்கேட் விமான நிலையத்தில் வைத்து போலீசார் அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர். முன்னதாக பாவெல் துரோவ் தனது பிரைவேட் ஜெட்டில் அர்பைஜான் நோக்கி சென்ற நிலையில் பாரீஸ் போலீசார் கைது செய்துள்ளனர்.

தீவிரவாத இயக்கங்களுக்கு உதவி செய்தது, போதை பொருள் விநியோகம், மோசடி உள்ளிட்ட குற்றசாட்டுகளின் கீழ் அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், துரோவ் தனது தளத்தின் குற்றவியல் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கத் தவறியதாகவும் கூறப்படுகிறது. துரோவ் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுனிதாவை மீட்க எலான் மஸ்க்கின் ‛‛ஸ்பேஸ் எக்ஸை” நாடும் நாசா

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், புஜ் வில்மோர் ஆகிய இருவரும் 2025 பிப்ரவரியில் பூமிக்கு திரும்புவர் என அறிவிக்கப்பட்ட நிலையில், பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன உதவியுடன் அவர்களை மீட்டுவர நாசா நடவடிக்கையை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோருடன் இணைந்து கடந்த ஜூன் 5ம் தேதி விண்வெளிக்கு ஆய்வுக்கு சென்றனர். திட்டமிட்டபடி பூமிக்கு திரும்ப திட்டமிட்டிருந்த நிலையில், சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பூமிக்கு திரும்பும் பயணம் ஒத்திவைக்கப்பட்டது. 2025 பிப்ரவரி மாதம் வரை சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி நிலையத்திலேயே இருக்க வேண்டியிருக்கும் என நாசா அறிவித்துள்ளது.

இந்நிலையில் க்ரோ-9 (Crew 9” ) என்ற திட்டத்தின் கீழ், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செப்டம்பர் மாதம் 2 பேர் கொண்ட ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் குழு உதவியுடன் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் , புஜ் வில்மோரை பூமிக்கு மீட்டுவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு செல்ல புதிய நடைமுறை அறிமுகம்..!

திருச்சி, ஆக.23 திருச்சியிலிருந்து இலங்கை வழியாக சிங்கப்பூருக்கு ஒரே பயணச்சீட்டின் மூலம் பயணிக்கும் புதிய நடைமுறையை ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் புதன்கிழமை முதல் தொடங்கியுள்ளது .திருச்சி – இலங்கை இடையே ஏற்கெனவே ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் தினசரி போக்குவரத்துகளை இயக்கி வருகிறது. இந்நிலையில், சிங்கப்பூரிலிருந்து இலங்கை வழியாக சிங்கப்பூர் செல்லும்வகையில் ஒரு கூடுதல் புதிய வசதியை அறிமுகப் படுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்திருந்தது.

அந்த வசதி புதன்கிழமை முதல் திருச்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.அதாவது திருச்சி – சிங்கப்பூர் என ஒரே பயணச்சீட்டின் மூலம் இலங்கை சென்று அங்கிருந்து, அதே விமானம் அல்லது அதே நிறுவனத்தைச் சேர்ந்த மாற்று விமானம் மூலம் பயணிக்க முடியும். இலங்கையில் உடமைகளை இறக்கி மீண்டும் சோதிப்பது, குடியேற்றச்சோதனை உள்ளிட்டவை தேவையில்லை.

ஒரு முறை அவற்றை திருச்சியில் மேற்கொண்டாலே போதுமானது. இதுபோல ஏற்கெனவே வளைகுடா நாடுகளுக்கு திருச்சியிலிருந்து ஒரே விமான சீட்டு மூலம் இலங்கை சென்று அங்கிருந்து அதே நிறுவனத்தின் வேறு (மாற்று ) விமானம் மூலம் பயணிக்கும் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது.அதுபோலவே சிங்கப்பூருக்கும் செல்ல இந்த புதிய வசதியை ஸ்ரீலங்கன் விமான நிறுவனம், திருச்சியில் நடைமுறைப் படுத் தியுள்ளது.

அந்த வகையில்,திருச்சியிலிருந்து காலை 9.55க்கு புறப்பட்டு 10.55 க்கு இலங்கை தலைநகர் கொழும்பு விமான நிலையத்தை அடைகிறது. பின்னர் அங்கிருந்து பகல் 12.15க்கு புறப்பட்டு சிங்கப்பூரை மாலை 6.55க்கு சென்றடைகிறது. அங்கிருந்து புறப்படும் விமானம் மறுநாள் அதிகாலை இலங்கை வந்தடைந்து அங்கிருந்து மறுநாள் காலை 7.05க்கு புறப்பட்டு திருச்சியை காலை 8.05க்கு வந்தடைகிறது.

சீனாவில் பெய்த கனமழையில் சிக்கி 11 பேர் பலி..!

0

வடகிழக்கு சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள ஹுலுடாங் நகரில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 14 பேர் மாயமாகினர். அவர்களை தேடும் பணியில் மீட்புக்குழு ஈடுபட்டு வருகிறது. மேலும், கனமழையால் 100 கோடிக்கும் அதிகமான சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த கனமழையால் ஹுலுடாவ் நகரத்திற்கு குறிப்பாக ஜியான்ஜாங் மற்றும் சுய்சோங் மாகாணங்களில் கடும் சேதம் ஏற்பட்டது. சாலைகள், மின்சாரம், தகவல் தொடர்பு, வீடுகள், பயிர்கள் போன்றவை கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

கடந்த இரண்டு மாதங்களில் சீனாவில் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் 150-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம்; நான்கு துறைகளில் இந்தியா-உக்ரைன் இடையே ஒப்பந்தம்!

விவசாயம், மருத்துவம், கலாச்சாரம் மற்றும் மனிதாபிமான உதவி ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இந்தியாவும் உக்ரைனும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23) நான்கு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.பிப்ரவரி 2022இல் ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து உக்ரைனுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் முதல் பயணத்தின் போது இந்த ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டன.

1991ஆம் ஆண்டு உக்ரைன் சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் உக்ரைனுக்குச் செல்வது இதுவே முதல்முறையாகும்.பிரதமர் மோடியின் பயணம் ரஷ்யாவின் மேற்கு குர்ஸ்க் பகுதியில் உக்ரைன் ராணுவம் மேற்கொண்ட தாக்குதலின் பின்னணியில் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நட்பு மற்றும் வரலாற்று சிறப்புமிக்க பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம்

உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி, பிரதமர் மோடியின் பயணம் நட்பு ரீதியானது மற்றும் வரலாற்று சிறப்பு மிக்கது என வர்ணித்துள்ளார்.பிரதமர் மோடியின் சமீபத்திய ரஷ்யா பயணத்தை ஜெலென்ஸ்கி முன்பு விமர்சித்ததை நினைவு கூர்ந்தார்.இதற்கிடையில், இந்த சந்திப்பு இந்தியா-உக்ரைன் உறவுகளுக்கு குறிப்பிடத்தக்க நாள் என்று பிரதமர் மோடி விவரித்தார் மற்றும் அமைதிக்கான செய்தியுடன் தான் வந்திருப்பதாக வலியுறுத்தினார்.

போரின் போது இந்தியா அலட்சியமாக இருந்ததில்லை என்றும் அவர் கூறினார். உக்ரைனின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு இந்தியாவின் ஆதரவையும் பிரதமர் மோடி உறுதிப்படுத்தினார்.2021ஆம் ஆண்டு முதல் சந்திப்பிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையே பகிர்ந்து கொள்ளப்பட்ட ஆழமான நட்பின் உணர்வை அவர் எடுத்துரைத்தார்.

பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம்

மைல்கல் என பாராட்டிய ஜெய்சங்கர் இதற்கிடையில், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம் ஒரு மைல்கல் என்று கூறினார்.1992ஆம் ஆண்டு தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்ட பின்னர், இந்தியப் பிரதமர் ஒருவர் உக்ரைனுக்குச் செல்வது இதுவே முதல் முறை என்று அவர் குறிப்பிட்டார்.

ரஷ்யா-உக்ரைன் மோதலில் இந்தியா நடுநிலை வகிக்கிறது என்ற கூற்றையும் நிராகரித்த அவர், தங்களால் முடிந்ததைச் செய்ய தயாராக இருக்கிறோம் என்றும், மோதல் முடிவுக்கு வரவேண்டும் என்றே தாங்கள் விரும்புவதாகவும் கூறினார்.இதற்கிடையே, பிரதமர் மோடி உக்ரைனில் இருந்த நேரத்தில் அங்குள்ள இந்திய சமூகத்தினரை சந்தித்து, இந்தி படிக்கும் உக்ரேனிய மாணவர்களுடன் உரையாடினார்.

பணி நேரம் முடிந்தபிறகு அலுவலகம் தொடர்பான CALLS, MESSAGES, EMAILS ஆகியவற்றை நிராகரிக்கும் உரிமை!

பணி நேரம் முடிந்தபிறகு அலுவலகம் தொடர்பான CALLS, MESSAGES, EMAILS ஆகியவற்றை நிராகரிக்கும் உரிமையை தொழிலாளர்களுக்கு வழங்கும் புதிய சட்டம், வரும் 26ம் தேதியில் இருந்து ஆஸ்திரேலியாவில் அமலாகிறது!

இதன் மூலம் பணியாளர்கள் வேலை முடிந்தவுடன் தங்களின் தனிப்பட்ட வேலைகளில் ஈடுபட்டு, நிம்மதியுடனும், சந்தோஷத்துடனும் இருக்க இச்சட்டம் வழிவகை செய்துள்ளது. இச்சட்டம் ஏற்கனவே பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் அமலில் உள்ளது

நேபாள பஸ் விபத்து: பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு..!

காத்மாண்டு,இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் இருந்து 43 பேர் பஸ்சில் நேபாளத்திற்கு 10 நாட்கள் ஆன்மிக சுற்றுலா சென்றனர். நேபாளத்தின் பொக்காராவில் இருந்து நேற்று காலை காத்மாண்டு நோக்கி பஸ் சென்றுகொண்டிருந்தது. தனாஹன் மாவட்டத்தில் மார்ஸ்யாங்டி ஆற்றின் அருகே சென்றுகொண்டிருந்த பஸ், எதிர்பாராதவிதமாக ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.இந்நிலையில், ஆற்றில் கவிழ்ந்து பஸ் விபத்துக்குள்ளான சம்பவத்தில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேலும் 25 பேர் உயிரிழந்தனர். இதனால், இச்சம்பவத்தில் உயிரிழந்த இந்தியர்கள் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.முதற்கட்டமாக, உயிரிழந்த 24 சுற்றுலாப் பயணிகளின் உடல்கள் நாளை நாசிக்கிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மராட்டிய அரசு தெரிவித்துள்ளது

உலகின் மிகப்பெரிய 2,492 காரட் வைரம் போட்ஸ்வானாவில் கண்டுபிடிப்பு..!

கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது பெரிய கல் என்று போட்ஸ்வானா அரசாங்கம் கூறுகிறது.1905க்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய வைரம் இதுவாகும்.இன்னும் பெயரிடப்படாத இந்த வைரத்தின் எடை தோராயமாக அரை கிலோகிராம் என கணக்கிடப்பட்டுள்ளது.

பொது விற்பனைக்கு வருவது குறித்து விரைவில் முடிவு

இந்த வைரத்தை மதிப்பிடுவது அல்லது எப்படி விற்கப்படும் என்பதை முடிவு செய்வது மிக விரைவில் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.போட்ஸ்வானாவில் உள்ள அதே சுரங்கத்தில் இருந்து மற்றொரு பெரிய வைரம் 2016இல் $63 மில்லியனுக்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.வைரத்தை கண்டுபிடித்த கனடிய சுரங்க நிறுவனமான Lucara Diamond Corp. இன் போட்ஸ்வானா நிர்வாக இயக்குனர் நசீம் லஹ்ரி, “இது ஒரு வரலாற்று கண்டுபிடிப்பு” என்றார்.

மத்திய போட்ஸ்வானாவில் உள்ள கரோவ் சுரங்கத்தில் இருந்து இந்த சரித்திர வைரத்தை மீட்டெடுத்ததாக லுகாரா புதன்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்தது.இது ஒரு “உயர்தர” கல் என்றும், அது அப்படியே காணப்பட்டதாகவும் லூகாரா கூறினார்.இது பெரிய வைரங்களைக் கண்டுபிடிக்க வடிவமைக்கப்பட்ட எக்ஸ்ரே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கப்பட்டது.

எடைப்படி இரண்டாவது பெரிய வைரம்

எடைப்படி, கடந்த 119 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய வைரமாகவும், 1905ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட கல்லினன் வைரத்திற்குப் பிறகு சுரங்கத்திலிருந்து தோண்டப்பட்ட இரண்டாவது பெரிய வைரமாகவும் இது உள்ளது.புகழ்பெற்ற கல்லினன் வைரம் 3,106 காரட்கள் மதிப்புடையது.

இது பின்னர் கற்களாக வெட்டப்பட்டது.அவற்றுள் சில பிரிட்டிஷ் கிரவுன் நகைகளின் ஒரு பகுதியாக தற்போது உள்ளது.அதேபோல், 1800 களின் பிற்பகுதியில் பிரேசிலில் ஒரு பெரிய, குறைவான தரம் கொண்ட கருப்பு வைரம் கண்டுபிடிக்கப்பட்டது.ஆனால் அது தரையின் மேற்பரப்பில் ண்டுபிடிக்கப்பட்டது மற்றும் ஒரு விண்கல்லின் ஒரு பகுதியாக இருந்ததாக நம்பப்பட்டது.

மெதுவாக செல்லும் ரயிலுக்கும் மவுசு: சுற்றுலா பயணிகளின் விருப்பம்..!

வெறும் 291 கி.மீ. தொலைவை 8 மணி நேரத்தில் கடக்கும் உலகின் மெதுவாக செல்லும் ரயில் பார்ப்போரை பிரமிக்க வைக்கிறது.!

ரயில் என்றாலே வேகமாக தானே போக வேண்டும். அதிலும் சிக்குபுக்கு என்று காதை பிளக்கும் வகையில் ஒலி எழுப்பியபடி, மரங்களையும், பாறைகளையும் அசுர வேகத்தில் பின்னோக்கி நகர்த்திய படி செல்வதை நாம் பார்த்திருப்போம், பயணித்து இருப்போம். ஆனால், மெதுவாக.. அதிலும் ரொம்ப மெதுவாக, இயற்கை காட்சிகளை பார்த்து ரசித்தபடி செல்ல ரயில் இருந்தால் எப்படி இருக்கும்?

கிளேசியர்

அப்படி ஒரு ஆச்சரிய ரயில் உள்ளது. உலகின் மிக மெதுவாக இயங்கும் ரயில் என்று இதற்கு பெயர். கிளேசியர் எக்ஸ்பிரஸ்… பனிப்பாறை எக்ஸ்பிரஸ் ரயில் என்ற மற்றொரு பெயரிலும் இந்த ரயில் அழைக்கப்படுகிறது. இந்த ரயில் சுவிட்சர்லாந்து நாட்டின் ஆல்ப்ஸ் உள்ள ஆன்டர்மாட் வழியாக செல்கிறது. வழியில், ஜெர்மாட், செயிண்ட் மோரிட்ஸ் ஆகிய 2 பகுதிகளை இணைக்கிறது.

குகைகள்

மொத்தம் 291 கி.மீ. தொலைவை இந்த ரயில், கடக்க கிட்டத்தட்ட 8 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. வழியெங்கும் சுற்றிலும் பனிப்பாறைகள், பள்ளத்தாக்குகள், நீண்ட நெடிய குகைகள், அழகிய கிராமங்கள் என கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் பார்த்துக் கொண்டே செல்லலாம்.

291 பாலங்கள்

பயணத்தில் மொத்தம் 291 பாலங்கள், 91 சுரங்கங்களை ரயில் கடந்து செல்வது வேற லெவல் அனுபவம் என்றே சொல்லலாம். வெளிப்புற இயற்கையை உள்ளே இருந்து ரசித்தபடி செல்ல, அழகிய, அகலமான கண்ணாடி ஜன்னல்கள் அமைக்கப்பட்டு உள்ளன. சில பெட்டிகளில் இந்த கண்ணாடிகள் ரயிலின் கூரை வரை வடிவமைக்கப்பட்டு உள்ளது கூடுதல் அம்சம்.

ஆண்டு முழுவதும் பயணம்

முதல் தர வசதிகளுடன் கூடிய அழகிய இருக்கைகள், துரித சேவையுடன் கூடிய சுவையான உணவு என ரயிலின் உட்புறம் பார்க்கும் போது, பயணிகளை பிரமிக்க வைக்கிறது. குளிர்காலம், வெயில்காலம் என ஆண்டு முழுவதும் இயங்கும் வகையில் ரயில் சேவை அட்டவணை வடிவமைக்கப்பட்டு உள்ளது.

பயணிகள் ஆர்வம்

உலகின் மிக மெதுவாக செல்லும் ரயில் என்று பெருமை பெற்ற இந்த ரயிலில் ரம்மியமான, மனதை மயக்கும் இயற்கை காட்சிகள், பனிப்படர்ந்த மலைகள் என இந்த ரயிலில் பயணிக்க விரும்பும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.