Last Updated on: 7th September 2023, 01:56 pm
ஐஐடி, ஐஎம்எம்களில் படித்துவிட்டு அதிக சம்பளத்துக்காகவும், வசதியான வாழ்க்கைத் தரத்துக்காகவும் இதுவரை பல கோடி மக்கள் இந்தியாவை விட்டு வெளிநாடுகளில் குடியேறியுள்ளனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அதிகப்படியான இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.
இதில் இப்போது ரிட்டயர்மென்ட் வயதைப் பெரும்பாலானவர்கள் நெருங்கிவிட்டனர். என்னதான் அதிக சம்பளத்தை வெளிநாட்டில் வாங்கினாலும் அந்தப் பணத்தின் மதிப்பு அந்த நாட்டில் பெரிதாக இருக்காது. எனவே இதுவரை சேர்த்து வைத்த பணத்தைக் கொண்டு வந்து தங்களது தாய் நாடான இந்தியாவில் வந்து செட்டில் ஆகி மீதக்காலத்தை நிம்மதியாகக் கழிக்கும் மனப்பான்மைக்கு வந்துவிட்டனர்.
குறிப்பாக அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் இந்தியாவுக்குத் திரும்ப ஆர்வத்துடன் உள்ளதாக இதுபற்றி மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
என்ஆர்ஐகளுக்கு இந்திய அரசு பல நிதிச் சலுகைகளை அளிக்கின்றது. அவர்கள் அந்நியச் செலாவணியில் சம்பாதிக்கவும், இந்தியாவில் முதலீடு செய்து சேமிக்கவும் தாராளமாக அனுமதிக்கிறது. ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த குறைந்தது 60 சதவீத என்ஆர்ஐகள் இதனால் இந்தியா வருவதற்கு தயாராகி வருகின்றனர்.
இதில் 30 – 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு இந்த ரிட்டயர்மென்ட் யோசனை இல்லை என்றாலும், அதற்கு மேற்பட்டவர்கள் தயாராகவே உள்ளனர்.
இதுபற்றி SBNRI என்ற நிறுவனம் மேற்கொண்ட கணக்கெடுப்பில், ஆஸ்திரேலியா, சிங்கப்பூரில் உள்ள என்ஆர்ஐகளில் 80 சதவீதமும், இங்கிலாந்தில் 70 சதவீதமும், அமெரிக்காவில் 75 சதவீதமும், கனடாவில் 63 சதவீதமும் தங்கள் ஓய்வூதியத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியாவுக்குத் திரும்புவதை விரும்புகின்றனர்.